காவிரி பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் , கர்நாடகா முதலமைச்சர்களிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் வெற்றியடையவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தின் 34ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி , இந்தியாவில் 7500 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் வளம் உள்ளது. தற்போது சென்னையில் ஒரு யூனிட் மின்சாரம் 6 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. எனவே, கடல்நீரை சுத்திகரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் 3 ரூபாய்க்கும் கீழ் அதாவது 2.40க்கு மின்சாரம் கொடுக்க முடியும் என தெரிவித்தார்
இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய தேவையாக மின்சாரம் உள்ளது. தண்ணீரை பாதுகாப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற தண்ணீர் சேமிப்பு திட்டங்களை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் செயல்படுத்துவது தொடர்பாக இரண்டு மாநில முதலமைச்சர்களிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் வெற்றியடையவில்லை.
ஆனால் நான் நம்பிக்கையாக உள்ளேன், தண்ணீர் பிரச்னையை தீர்க முடியும் என நம்புகிறேன். காவிரியில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்தாலே இரு மாநில தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.