இனி கட்சியை நடத்துவதில் அர்த்தமில்லை... வேட்பாளராக நிறுத்தவே ஆள் இல்லை... ராமதாஸ் புலம்பல்..!

By Thiraviaraj RMFirst Published Nov 21, 2021, 10:47 AM IST
Highlights

ஏன் இந்த பின்னடைவு, பா.ம.க. தொண்டர்களின் வீரம், மானம் எங்கே போனது? 

நாம் இனி கட்சியை தொடர்ந்து நடத்துவதில் அர்த்தமில்லை. வேட்பாளராக நிறுத்தவே ஆள் இல்லை; வெட்கக்கேடு’’ என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


 
அப்போது பேசிய அவர், ’’தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம். நம்மிடம் சக்தி இல்லை. சக்தி இழந்து கிடக்கிறோம். ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள். இதனால் மாறி, மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்.எல்.ஏ.க்கள், 25 எம்.எல்.ஏ.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள், 10 ஆண்டு காலம் 2 மத்திய அமைச்சர்கள் என பா.ம.க.வின் பலம் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது நீங்கள் சொன்னீர்கள் தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என்று.

தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் 5 தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளோம். உள்ளூர் புரிதலுக்கு விட்டுக்கொடுப்பது என தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பா.ம.க.வுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது.

 

இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரசாரம், சோசியல் மீடியா (செல்போன்) மூலமாக பிரசாரம் செய்வது தான். கட்சியில் ஒரு சில பகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட ஆள் இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பலம் இழந்து விடுவோம். நம்முடைய பகுதியை மட்டும் சொல்லவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள நிலையைத்தான் சொல்கிறேன். நாம் இனி கட்சியை தொடர்ந்து நடத்துவதில் அர்த்தமில்லை. 75 லட்சம் ரூபாய்க்கு சோரம் போய்விட்டார் ஒரு பாமக நிர்வாகி.

இதையும் படியுங்கள்:- திருச்சியில் பயங்கரம்.. ஆடு திருடும் கும்பலால் எஸ்எஸ்ஐ கொடூரமாக வெட்டிப் படுகொலை.!

ஏன் இந்த பின்னடைவு, பா.ம.க. தொண்டர்களின் வீரம், மானம் எங்கே போனது? பா.ம.க.வின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். உயிரே போனாலும் காசு வாங்க மாட்டேன் என்று இருப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் சில நிர்வாகிகள் அப்படி இல்லை.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது. அவர் திறமையானவர். அவரது தலைமையில் பா.ம.க.வின் ஆட்சி அமைய வேண்டும்.

ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சோசியல் மீடியா கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும். நமது கட்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். எந்த கட்சிக்கும் சொந்தமில்லை, பந்தமில்லை. ஆனால் பா.ம.க.வுக்கு சொந்த பந்தம் உண்டு. அனைவரும் அன்புமணியின் தம்பிகள், தங்கைகள் என அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். வருங்காலம் நமதாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்க வேண்டும். பாமக மாவட்ட செயலாளர் திமுகவுக்கு வேலை செய்கிறார். வேட்பாளராக நிறுத்தவே ஆள் இல்லை; வெட்கக்கேடு’’ என அவர் தெரிவித்தார்.
 

click me!