பொது வெளியில் போலீசாரை களங்கப்படுத்தும் ஒருத்தரையும் சும்மா விடக்கூடாது!CMக்கு மெசேஜை தட்டிவிட்ட இந்து முன்னணி

By vinoth kumarFirst Published Jan 31, 2023, 9:20 AM IST
Highlights

ஆரணி காவல்துறை. காவல்நிலையம் வந்த வி.சி.க. மாவட்ட தலைவர் ஆய்வாளரை சாதி சொல்லி தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்காக அவரைக் கைது செய்தது காவல்துறை. ஜாமினில் வெளியில் வந்த வி.சி.கவினர் காவல்துறையை கேவலப்படுத்தி கோஷம் போட்டு ஊர்வலமாக போனதுடன், காவல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் காவல்துறையின் கண்ணியத்தை காக்க முன்வர வேண்டும் என  காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். 

இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சமீபத்தில் அரசு நிலத்தையும், அருகில் இருந்த தனியார் இடத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்தது ஆரணி காவல்துறை. காவல்நிலையம் வந்த வி.சி.க. மாவட்ட தலைவர் ஆய்வாளரை சாதி சொல்லி தரக்குறைவாக பேசியுள்ளார். அதற்காக அவரைக் கைது செய்தது காவல்துறை. ஜாமினில் வெளியில் வந்த வி.சி.கவினர் காவல்துறையை கேவலப்படுத்தி கோஷம் போட்டு ஊர்வலமாக போனதுடன், காவல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. தேசத்தை காக்கும் எல்லைசாமி நமது இராணுவத்தினர். அதுபோல ஊரை காக்கும் சாமி நமது காவல்துறை என்பார் இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள். காவல்துறையை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டி தார்மீக ரீதியாக அவர்கள் மன உறுதியை குலைப்பது நக்சல் தேச விரோத பிரிவினைவாதிகள் செயல். அப்படி காவல்துறையினர் மன உளைச்சலுக்கு ஆளானால் சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டமாக போகும். காவல்தூறையில் யாராவது தவறு செய்தால் அவர்களை சுட்டிக்காட்டி கண்டிக்கலாம். ஒட்டுமொத்த காவல்துறையை குறைகூறுவது முட்டாள்தனம். 

அதே போல் சிவகங்கையில் சட்டவிரோதமாக ஈ.வெ.ரா. சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தாசில்தார், காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அரசு மாற்றியிருக்கிறது. இது ஆளும்கட்சி கூட்டணியில் இருப்பவர்கள் செய்யும் சட்ட விரோத செயலுக்கு துணை போக அரசுத் துறையை நிர்ப்பந்திப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் உயர் அதிகாரிகள் துறை மாற்றம் என்ற பெயரில் அரசால் பந்தாடப்படுகிறார்கள். இவற்றை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் காவல்துறையின் கண்ணியத்தை காக்க முன்வரவும், காவல்துறையை களங்கப்படுத்தி பொது தளங்களில் நடந்து கொள்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

click me!