இந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி!

By Asianet TamilFirst Published Jul 27, 2021, 9:46 PM IST
Highlights

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துடிக்கும் அரசியல்வாதியாக மு.க.ஸ்டாலின் திகழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே எந்தவொரு முதல்வரும் இவ்வாறு செய்ததில்லை  என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
 

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதுதொடர்பான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக 100 நாட்களில் பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தார். அப்போது, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று கூறி சிரித்தார்கள். இன்று அவர் சொன்னதைபோல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் 8,785 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இதில் 2 ஆயிரத்து 46 மனுக்கள் நிலுவையில் உள்ளன. 2 ஆயிரத்து 68 மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 3 ஆயிரத்து 620 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி என்றால், அந்த மனுக்களில் பெரும்பாலானவை பட்டா கேட்டு கொடுத்துள்ளார்கள். ஆனால், நீர்நிலைகளில் வீடுகள் கட்டிவிட்டு, அதற்கு பட்டா கேட்டால் எப்படி கொடுக்க முடியும்? நீர் ஆதாரங்களில் வீடுகட்டி பட்டா கேட்டால் கொடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, ஸ்டாலின் அரசு நீர் ஆதாரங்களை பாதுகாக்கும். நீர்நிலைகளில் வீடு கட்டிவிட்டு பட்டா கேட்டால் தர முடியாது.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துடிக்கும் அரசியல்வாதியாக மு.க.ஸ்டாலின் திகழ்ந்துகொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே எந்தவொரு முதல்வரும் இவ்வாறு செய்ததில்லை. பிற முதல்வர்களுக்கெல்லாம் பாடமாக ஸ்டாலின் திகழ்கிறார்.” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 

click me!