தெலுங்கானாவில் என்னை யாரும் விரட்டவும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை.. நாராணசாமிக்கு தமிழிசை பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 14, 2022, 6:35 PM IST
Highlights

புதுச்சேரியைபோல தெலுங்கானாவிலும் மக்களை சந்தித்து வருகிறேன் என்றும், அங்கு தன்னை யாரும் விரட்டவும் இல்லை அதற்கு அவசியமும் இல்லை என ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியைபோல தெலுங்கானாவிலும் மக்களை சந்தித்து வருகிறேன் என்றும், அங்கு தன்னை யாரும் விரட்டவும் இல்லை அதற்கு அவசியமும் இல்லை என ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில்  பொதுமக்களை சந்திக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் மக்களை சந்திக்க தைரியம் உண்டா என முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தமிழிசை இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

தெலுங்கானா, பாண்டிச்சேரிக்கு என இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்துவருகிறார். தெலுங்கானா மாநில அரசுடன் அவருக்கு மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், பெரும்பாலான நேரங்கள் அவர் பாண்டிச்சேரியில் கழித்து வருகிறார், அதுமட்டுமின்றி தெலுங்கானா மாநிலத்தில் ஒரு சராசரி ஆளுநராக செயல்பட்டு வரும் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் எக்ஸ்ட்ராடினரி ஆளுநராக செயல்பட்டு வருகிறார், அரசு அலுவலகத்தில் சென்று ஆய்வு மேற்கொள்வது, பொதுமக்களை சந்தித்து குறை கேட்பது,  அரசு திட்டங்கள் குறித்து அறிவிப்பது என தனி அரசாங்கமே நடத்தி வருகிறார் என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பொதுமக்களை சந்தித்து வரும் நிலையில், இங்கி சந்திப்பது போல தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் மக்களை சந்திக்க தமிழிசைக்கு தைரியம் உள்ளதா என நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன்  அதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

நாராயணசாமிக்கு தமிழிசை பதில்: 

மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர், சகோதரர் நாராயணசாமி அவர்களுக்கு வணக்கம்... பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த துறையில் எந்த பதவியில் இருந்தாலும் மக்கள் சேவைதான் பிரதானமான பணி என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. புதுச்சேரியிலும் தலைமைச் செயலரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். - செயலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், துறை தலைவர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் அலுவலகப் பணிகளை விடுத்து மக்களைச் சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மக்களின் குறைகளைக் கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். அதற்கான சுற்றறிக்கை அனுப்ப கேட்டிருக்கிறேன். அவரும் அதற்கு இசைவு  தெரிவித்துக்ளார்.

அதேபோல, நானும் என்னை சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால் மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்பு கொள்ள முடியாதவர்கள், குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து மக்களை சந்திக்க மாதத்தில் இரண்டு நாட்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது. 

மக்களை சந்திக்கும் பழக்கம் எனக்கு நெடு நாட்களாகவே இருந்து வருகிறது. 

தெலுங்கானா மாநிலத்தில் மக்களை சந்திக்க முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அதற்காக தெளிவுபடுத்துகிறேன். தெலுங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பெண்களையும் மாணவர்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன். நான் பதவி ஏற்ற முதல் வாரத்திலேயே “பிரஜா தர்பார்“ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். இது யாருடைய. எந்த நிகழ்வின் தொடர்ச்சியும் அல்ல. நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன். தெலுங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். 

நீங்கள் கூறியதைப் போல அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு, தெலுங்கானா மாநிலத்தில் நான் மூன்றாம் ஆண்டில்  செய்த அன்றாடப் பணிகள் பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது மேலான பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வெளியிட்டிருந்தாலும் மூன்றாம் ஆண்டில்  அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகம் என்பதால் இதனை அனுப்பி வைக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தமிழிசை சௌந்தரராஜன்).
 

click me!