
பாஜக மீதும் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வேறு எதுவும் தடுக்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா என 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முதன் முறையாக வரலாற்று வெற்றியைப் பெற்றது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதுவும் இந்த 4 மாநிலங்களிலும் தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக பாஜக வெற்றி பெற்றது. இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் தேர்தல் மூலம் 2024-ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அக்கட்சியினர் ஆவலில் உள்ளனர்.
பாஜக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜக வெற்றி குறித்து அக்கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தேர்தல் முடிவுகள் மக்கள் பாஜகவுடன் இருப்பதை தெளிவாகக் காட்டுகின்றன. பாஜக மீதும் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வேறு எதுவும் தடுக்க முடியாது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மேலும் சிதைந்துவிட்டது.
எப்போதும் மக்களுக்காகப் பாடுபடுபவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும்தான் மக்கள் வாக்களிப்பார்கள். பாஜகவில் உள்ள நாங்கள் அதைச் செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிக்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தனர். கடுமையாக உழைத்தவர்களுக்கும் செய்தி, சித்தாந்தம், ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர்களுக்கும் நன்றி. பிரதமர் நரேந்திர மோடி ஜி, இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்காது” என்று நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.