
தமிழகத்தில் 'ஜி' என்ற வார்த்தையால் எந்த பிரயோஜனம் இல்லை என்றும், ஜி என்ற வார்த்தையை மறந்தும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் இல.கணேசன், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
வட மாநிலங்களைப் பொருத்தவரை பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள், மற்றவரை அழைக்கும்போது 'ஜி' என்று அழைப்பது வழக்கம். ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை அக்கா, அண்ணா, அம்மா, அய்யா போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், 'ஜி' என்ற வார்த்தை, தமிழக மக்களிடம் அந்நியமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் பாஜக தலைவர்கள் 'ஜி' என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 'கணேசன் ஜி' என்று பேசியிருந்தார். தான் பேசியதை மாற்றிக் கொண்ட அவர், கணேசன் அண்ணன் அவர்களே, எச். ராஜா அண்ணன் அவர்களே என்று கூறி கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் பேசிய பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் பேசுகையில், 'ஜி' என்ற வார்த்தை நமக்கு சாதாரணமாக தோன்றினாலும், தமிழக மக்களைப் பொருத்தவரை முக்கியமானது என்றார். தமிழக மக்களிடம் இருந்து நாம் அந்நியப்படுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றும், மக்களின் ஆதரவைப் பெற 'ஜி' என்ற வார்த்தையை மறந்தும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என்றும் இல.கணேசன் பேசினார்.