தேர்தலில் போட்டியிட செந்தில்பாலாஜி, கே.சி.பழனிச்சாமிக்கு தடை இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

First Published Oct 19, 2016, 3:03 AM IST
Highlights


அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடை தேர்தலில் போட்டியிட செந்தில்பாலாஜி, கே.சி.பழனிச்சாமி ஆகியோருக்கு இதுவரை தடை விதிக்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனைதொடர்ந்து, நவம்பர் 22ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவம்பர் 19ல் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4தொகுதிகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற நவம்பர்5ம் தேதி கடைசி நாளாகும்.

முன்னதாக கடந்த மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த கடும் புகாரையடுத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.

மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு தேர்தல் முடிவுகள் வெளியான பின் உடல்நலக் குறைவால் காலமானார். 

இதனையடுத்து மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி  மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்ததால் அங்கும் இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 19ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறிய, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. 3 தொகுதிகளுக்கும் தலா2 பார்வையாளர்கள் வீதம் 6 பார்வையாளர்கள், நவம்பர் 3ம் தேதி வருகின்றனர்.

மேலும், அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட முந்தைய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செந்தில்பாலாஜி மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கு இதுவரை தடை விதிக்கவில்லை என்றார்.

click me!