அகிலேஷ் வேண்டாம்.. யோகிதான் வேண்டும்.. மீண்டும் முதல்வராக வர 48 சதவீதம் மக்கள் ஆதரவு..

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2021, 5:50 PM IST
Highlights

ஒட்டுமொத்த தேசமும் கொரோனாவை மிக மோசமாக கையாண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம் என விமர்சித்து வந்த நிலையில், சிறப்பு + மிக மிக சிறப்பு என மொத்தம் 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

கொரோனா நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு சிறப்பாக  கையாண்டதாக 22 சதவீதம் பேரும்,  மிக மிக சிறப்பாக கையாண்டதாக 23% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அவருக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. அதிலும் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உலக அளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்கள் அதை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலேயே  அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டில் உள்ளது என அம்மாநில அதிகாரிகள் கூறிவந்தாலும், மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாகவே அது உள்ளது.

சுமார் 24 கோடி மக்கள் தொகையுடன் இந்தியாவிலேயே மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. நாட்டில் ஆறில் ஒருவராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான அரசு அதிகாரிகள், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர். நாட்டிலேயே மிக மோசமான சுகாதார கட்டமைப்பு கொண்ட மாநிலமாக உத்திரப் பிரதேசம் உள்ளது என பல ஊடகங்கள் மோசமாக தாக்கிஇ செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால் மிகக் கடுமையான நெருக்கடியை சமாளித்து தற்போது அந்த மாநிலத்தில் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்வரும் தேர்தலில் கொரோனா தொற்று, அதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவின் சார்பில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். இந்த முறை எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதான எதிர் கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பகிரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம் பிரியங்கா காந்தியை களத்தில் இறக்க காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்தியநாத் போட்டியிட்டால் அவருக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்களா, அவருக்கான மக்கள் செல்வாக்கு எப்படி உள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பனவற்றை அறிந்து கொள்வதற்கான கருத்துக்கணிப்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அதில் மிக முக்கிய கேள்வியாக, கொரோனாகாலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு எவ்வாறு செயல்பட்டது என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சிறப்பாக செயல்பட்டது என 22 சதவீதம் பேரும், மிக மிக சிறப்பாக செயல்பட்டது என 23 சதவீதம் பேரும், ஓரளவுக்கு செயல்பட்டது என 32 சதவீதம் பேரும், மிக மோசமாக செயல்பட்டது என 13 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஒட்டுமொத்த தேசமும் கொரோனாவை மிக மோசமாக கையாண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம் என விமர்சித்து வந்த நிலையில், சிறப்பு + மிக மிக சிறப்பு என மொத்தம் 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் யோகி ஆதித்யநாத் அரசின் செயல்பாடுகளை ஆதரித்திருப்பவர்களின் சதவீதமே அதிகமென்பதால் எதிர்வரும் தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் வெற்றியை கொரோனா விவகாரம் எந்தவிதத்திலும் பாதிக்காது என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.  

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறை குறைகள் இருந்தாலும்,  மீண்டும் ஒரு முறை முதல்வராக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என மக்கள் மத்தியில் வைக்கப்பட்ட கேள்விக்கு அதில் 48 சதவீதம் பேர் மீண்டும் யோகி ஆதித்யநாத் வர விரும்புவதாகவும், 40 சதவீதம் பேர் அகிலேஷ் யாதவ் வரவேண்டுமென்று விரும்புவதாகவும், இன்னும் 12 சதவீதம் பேர், இவர்கள் இருவருக்கும் மாற்றாக ஒருவர் வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே மீண்டும் ஒருமுறை அகிலேஷ் யாதவ் போட்டியிடும் நிலையில் அவரை மக்கள் ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர் என்பது இக்கருத்துக் கணிப்பு வாயிலாக தெரியவந்துள்ளது.
 

click me!