#BREAKING பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 8, 2021, 1:44 PM IST
Highlights

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்களித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

பிறப்பு, இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யாவிடில் தாமத கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.  பிறப்பு, இறப்பு நிகழ்ந்தவுடன் 21 நாட்களுக்குள் அருகில் உள்ள சுகாதார ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் தெரியப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் தெரியப்படுத்த தவறும்பட்சத்தில் தாமத பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 2017 அக்டோபர் முதல் தாமத கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு மேல் தாமதமானால் தாமத பதிவு கட்டணம் 100. ஒரு மாதத்திற்கு மேல் தாமதமானால் 200, ஒரு ஆண்டிற்கு மேல் தாமதமானால் 500 தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என இருந்தது. 

தற்போது பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்களித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக ரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதை அறிவோம். நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகின்றன.

துயரமான இந்த சம்பவத்தில், சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ன்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ 100/- ஆகவும். 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ 200/- ஆகவும். ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500/- ஆகவும் உள்ளது.

பெருந்தொற்றினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கவும், அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத் வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டணத்தை காலதாமத கட்டண ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசே ஈடுசெய்யும் இருப்பினும், உரிய காலத்தில் பிறப்பு / இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!