மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அப்பள்ளியின் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியரான ஆனந்தன் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.
இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்தன் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட குழந்தைகள் நல ஆணையமும் அப்பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையமும் ஆசிரியர் ஆனந்தன் உட்பட பள்ளி நிர்வாகத்தினரை வரும் 10 ஆம் தேதி ஆணைத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளனர்.
காவல் துறையினரிடம் நேரடியாக இதுவரை எழுத்துப்பூர்வமான புகார்கள் ஏதும் பெறப்படாமல் இருந்த நிலையில் ஆசிரியர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு அடுத்தகட்ட நகர்வின்றி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியான 25 வயதுப் பெண் ஒருவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ஆனந்தன், தான் அப்பள்ளியின் பயின்றபோது தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான ஆனந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.