நெல்லை கண்ணனை வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
மோடியையும், அமித்ஷாவையும் இன்னும் ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள். எப்போது போட்டுத்தள்ளுவீர்கள் என அவதூறாக நெல்லை கண்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் அவர் மீது பல்வேறு பகுதிகளில் வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. ஆளுநரிடமும் புகார் அளிக்கப்பட்டு அவரி கைது செய்ய காவல்துறையினர் திட்டமுட்டுள்ளனர்.
இந்நிலையில் அவரை கைது செய்யக்கூடாது என சீமான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ’’பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே.
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத் துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து’’என எச்சரித்துள்ளார்.