
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. நீட் பாதிப்பு குறித்து ஆராய கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தயார் செய்திருந்தது. இந்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.
தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை மறுநாளான சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் தெரிவித்துள்ள விளக்கத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நீட் தேர்வை பற்றிய உண்மை நிலையை தெளிவாக விலக்குவதோடு, நீட் தேர்வு தொடர்பான சட்டமுன் வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றிட அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில், இதே நீட் மசோதாவை எவ்வித மாற்றமும் செய்யாமல் கவர்னருக்கு மீண்டும் அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.