பாஜக பக்கம் சாயும் திமுக? பிரச்சனைகளின் அடிப்படையில் ஆதரவளிக்க திட்டம்? பரபரக்கும் டெல்லி.! திமுகவின் அடுத்த மூவ் என்ன?

Published : Jun 18, 2026, 04:32 PM IST
DMK BJP Alliance

சுருக்கம்

எதிர்க்கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளால், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு மிக அருகில் வந்துள்ளது. அரசியல் சாசனத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற இன்னும் 6 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே தேவை என்பதால், மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை போன்ற மசோதாக்களை அரசு மீண்டும் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DMK BJP Alliance

எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்ட பெரிய பிளவுகள், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) மிகப்பெரிய சாதகமாக மாறியுள்ளது. மக்களவையில் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை எட்டுவதற்கு மோடி அரசுக்கு இப்போது வெறும் 6 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.

தோல்வியடைந்த மசோதா

கடந்த ஏப்ரல் மாதம், மகளிர் இட ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை அரசியல் சாசனத் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மக்களவையில் தோல்வியடைந்தது. அப்போது NDA கூட்டணிக்கு 54 வாக்குகள் குறைவாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் இந்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்தால், அதை எளிதாக நிறைவேற்ற அரசுக்கு வாய்ப்புள்ளது.

உடைந்த திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பெரிய பிளவுதான் NDA-வின் பலத்தை அதிகரித்துள்ளது. அக்கட்சியின் 28 மக்களவை எம்.பி.க்களில் 20 பேர் அதிருப்தி எம்.பி.க்களாக மாறி, 'நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா' என்ற கட்சியில் இணைந்துள்ளனர். அவர்கள் இப்போது NDA கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர்.

சிவசேனா கட்சியில் பிளவு

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவில் உள்ள 9 எம்.பி.க்களில் 6 பேர் கட்சியை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவில் சேரக்கூடும். இது ஆளும் கூட்டணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

காங்கிரஸ் திமுக சண்டை

காங்கிரஸுடனான கருத்து வேறுபாட்டால் 'இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேறிய மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, சில கோரிக்கைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்று டெல்லி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன. திமுகவின் 22 எம்.பி.க்களின் ஆதரவும் கிடைத்தால், ஆளும் கூட்டணியின் வாக்கு எண்ணிக்கை 348 ஆக உயரும்.

6 வாக்குகள் தேவை

மக்களவையின் தற்போதைய சூழலில், ஒரு அரசியல் சாசனத் திருத்த மசோதாவை நிறைவேற்ற 352 வாக்குகள் தேவை. திமுகவும் ஆதரித்தால், NDA-வின் பலம் 348 ஆக இருக்கும். மீதமுள்ள 6 வாக்குகளைப் பெறுவதற்காக, சமாஜ்வாதி கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் அல்லது எதிர்க்கட்சிகளில் உள்ள மற்ற சிறிய பிராந்தியக் கட்சிகளை பாஜக குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு (164 வாக்குகள்) NDA-வுக்கு இன்னும் 6 வாக்குகளே குறைவாக உள்ளது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவும் நிறைவேறும்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களின் ராஜினாவால் ஏற்படும் காலியிடங்களுக்கான இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையையும் NDA எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அரசு மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: முதல்வர் பிறந்த நாளில் வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு?
Magalir Urimai Thogai: பெண்களுக்கு கிடைக்கும் ரூ.2500.! இதை மட்டும் செஞ்சா போதும் 2 மடங்கு போனஸ் உறுதி.!