நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த நல்லம நாயுடு காலமானார்... ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் நாயகன்!

By Asianet TamilFirst Published Nov 16, 2021, 9:22 AM IST
Highlights

1996-ஆம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சென்னை மத்திய சிறையில் இருந்தபோது, அவரை விசாரிக்க நேரடியாக சென்றவர் நல்லம நாயுடு. வேறு தலைவர்களை இப்படி சிறைக்கு வந்து விசாரிப்பீர்களா என்று  நல்லம நாயுடுவிடம் ஜெயலலிதா சீறினார் என்று அப்போதே தகவல்கள் வந்தன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய நல்லம நாயுடு காலமானார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் நல்லம நாயுடு (83). லஞ்ச ஒழிப்பு துறையில் எஸ்.பி. வரை பதவி உயர்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு சென்னை பெரியார் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது முதிர்வைத் தாண்டி, நல்ல உடல் நலத்தோடுதான் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் வீட்டிலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய உடல் இன்று மாலை தகனம் செய்யப்படும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தது, 1996-ஆம் ஆண்டில் பதியப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு. 1995-ஆம் ஆண்டில் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அன்றைய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக 1996-ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமிக்கப்பட்டார். 1996-ஆம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சென்னை மத்திய சிறையில் இருந்தபோது, அவரை விசாரிக்க நேரடியாக சென்றவர் நல்லம நாயுடு. வேறு தலைவர்களை இப்படி சிறைக்கு வந்து விசாரிப்பீர்களா என்று  நல்லம நாயுடுவிடம் ஜெயலலிதா சீறினார் என்று அப்போதே தகவல்கள் வந்தன.

இதேபோல 2001-இல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஜெயலலிதா கையால், விருது வாங்க சூழல் நல்லம நாயுடுவுக்கு ஏற்பட்டபோது, அதிகாரிகள் தடுத்துபோதும் அந்த விழாவுக்கு வருவதில் உறுதியாக இருந்தார். ஆனால், மேலிட அதிகாரிகள் அவரை தடுத்து, விருதை வீட்டுக்கே அனுப்பி வைத்த நிகழ்வும் நடந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2014-ஆம் ஆண்டில் பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என்ற தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கை நூல் விடாமல் கொண்டு சென்றவர் நல்லம நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

click me!