
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் ரஜினியிடம் தமிழகத்தை காப்பாற்ற என்ன கொள்கை இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, அவர் விரைவில் அரசியலுக்கு வருவதாக பகிரங்கமாக தெரிவித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்துக்கு காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு போராட்டம், இலங்கை பிரச்சனை, முல்லை பெரியாறு, விவசாயிகள் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தலையை காட்டாத ரஜினி, தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதா? என சில அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்தும் வருகின்றனர்.
இதனிடையே ரஜினியின் உருவ பொம்மையை எரித்தும் சில அமைப்பினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவதாகவும், ஆணவ கொலைகளை தடுக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆணவ கொலைகள் தொடர்பான வழக்குகள் தேங்கி கிடப்பதாகவும் ஆணவ கொலையை தடுக்க வலியுறுத்தி சென்னையில் வரும் மே 27 ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய நல்லகண்ணு கூறியதாவது:
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் ரஜினியிடம் என்ன கொள்கை இருக்கிறது. அரசியல் என்பது தானாக வரவேண்டும்.
தமிழக முன்னேற்றத்திற்கு என்ன கொள்கை வைத்திருக்கிறார் ரஜினி. இதற்கு முன்பு என்ன கருத்து கூறியிருக்கிறார். காவிரி, ஈழ பிரச்னைக்கு என்ன நிலைப்பாடு இருக்கிறது.
ரஜினி இதற்கு முன் சில திட்டத்துக்கு நிதியுதவி தந்து உதவியது நல்லது தான். ஆனால் அது அரசியலுக்கு தீர்வாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.