பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும் என்பதே எனது பாலிசி... மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Feb 6, 2021, 4:50 PM IST
Highlights

நீட் தேர்வு முதல் ஏழு பேர் விடுதலை விவகாரம் வரை எல்லாவற்றையுமே அரைகுறையாகச் செய்யும் அரை அ.தி.மு.க - அரை பா.ஜ.க ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான இன்றைய ஆட்சி என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

நீட் தேர்வு முதல் ஏழு பேர் விடுதலை விவகாரம் வரை எல்லாவற்றையுமே அரைகுறையாகச் செய்யும் அரை அ.தி.மு.க - அரை பா.ஜ.க ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான இன்றைய ஆட்சி என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’என்ற தலைப்பில் திமுகவின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டு மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக்கொண்டார். திமுக ஆட்சிக்கு வந்து தான் முதலமைச்சராக பதவி பிராமணம் எடுத்துக்கொண்ட நூறு நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் மனு கொடுத்ததற்கான அட்டையுடன் கோட்டைக்குள்ளும், முதலமைச்சர் அறைக்குள்ளம் நூங்கள் தைரியாக வரலாம் என்றார். பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டிட வேண்டும் என்பதே தனது பாலிசி என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். 

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளால் அதன் மானம் காற்றில் பறக்கிறது. சமீபத்தில் அதைக் கண்டித்து உதயநிதி தலைமையில் தி.மு.க. இளைஞரணி ஒரு போராட்டம் நடத்தியது. ஆனால் இன்றுவரை அந்த வழக்கு முடிவடையவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். மீன்வளத்துறையில் இருக்கும் ஒரு திமிங்கலம் அதில் தப்பித்துக் கொண்டிருக்கிறது. அவர் பெயரைச் சொல்லி நான் இந்த மேடைக்கு இருக்கும் நாகரிகத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் ஓட்டுநர்களும், அலுவலர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலைவன ரோஜாக்களில், ‘இரயில் இன்ஜினை திருடியவனை விட்டுவிட்டு, அந்த இன்ஜினில் இருந்து விழுந்த கரித்துண்டை எடுத்தவனை கைது செய்தார்களாம்’ என்று தலைவர் கலைஞரின் வசனம் ஒன்று வரும். அதே போலத்தான் இது.

விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால் இன்றைக்கு அந்த விவசாயிகள் டெல்லியில் கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேலாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வெயிலில், கடுமையான குளிரில், பனியில், மழையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களிலிருந்து அங்கே வருகை தந்து டெல்லியை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் இதுவரை அவர்களை அழைத்து பேசவில்லை. ஆனால் 3 வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கூட நடத்தாமல், சர்வாதிகாரமாக அதை நிறைவேற்றி, விவசாயிகளுக்கு எதிரான கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள் என்றார்.

மேலும், சாகின்ற நேரத்தில் ‘சங்கரா சங்கரா’ என்று சொல்வதுபோல ஆட்சி முடிகின்ற கடைசி நேரத்தில், ‘விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும்’. அதுபோல புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் மேலும் ஓர் அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள். ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்குக் குறைவாக அடகுவைத்து வாங்கியிருக்கும் நகைக்கடன்களையெல்லாம் தள்ளுபடி செய்வோம் என்று நான் ஒரு உறுதிமொழி கொடுத்திருக்கிறேன்.

அதையும் இன்னும் 2 நாட்களில் அவர்கள் அறிவிக்கப்போகிறார்கள். யார் ஆளுங்கட்சி? யார் எதிர்க்கட்சி? என்பது தெரியவில்லை. நாம் சொல்வததைத் தான் இன்றைக்கு ஆட்சியாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற அறிவிப்புகளைத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் நம்பப் போவதில்லை.

இதே பழனிச்சாமியிடம், “இலவச மின்சாரத்தை கலைஞர் கொடுத்தார். 7,000 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். இப்போது விவசாயிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த கடனை எல்லாம் தள்ளுபடி செய்யுங்கள்” என்று நாங்கள் சட்டமன்றத்தில் கேட்கும்போது, ‘அது முடியவே முடியாது, நிதி இல்லை’ என்று சொன்னார். அது மட்டுமின்றி இதுகுறித்து விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். சென்னை உயர்நீதிமன்றம் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அதை ஏற்று அன்றைக்கு பழனிசாமி செயல்படுத்தவில்லை. அவர் உடனே உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கினார். அந்த வழக்கு இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

இவ்வாறு செய்துவிட்டு இப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால் - எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் அறிவித்த காரணத்தினால் - இதை அறிவித்திருக்கிறார். இதைத் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. விவசாயப் பெருங்குடி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு மரண அடி கொடுக்க போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நான் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

click me!