தேவர், வன்னியர்களை தொடர்ந்து நாடார்களின் வாக்கு வங்கிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறி வைத்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் வன்னியர்கள் போற்றும் ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கை அண்மையில் தான் நிறைவேற்றப்பட்டது. இதனால் வன்னியர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த இரண்டு அறிவிப்புகளுக்கு பின்னாலும் மிகப்பெரிய வாக்கு வங்கி அரசியல் உள்ளது. தென்மாவட்டங்களில் மெஜாரிட்டியாக உள்ள தேவர் சமுதாயத்தையும், வட மாவட்டங்களில் மெஜாரிட்டியாக உள்ள வன்னியர் சமுதாயத்தையும் மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆதரவை வரும் தேர்தலில் பெற முடியும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. மேலும் தமிழக அரசில் தற்போது கவுண்டர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களை சமாளிக்கும் வகையிலும் மற்ற ஜாதியின் தலைவர்களை போற்றும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தேவர், வன்னியர் சமுதாயத்தை தொடர்ந்து நாடார் சமுதாயத்தின் பக்கம் எடப்பாடி பழனிசாமியின் பார்வை திரும்பியுள்ளது. விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பவர்களாக நாடார்கள் உள்ளனர். இந்த தொகுதிகள் தவிர மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் நாடார்கள் உள்ளனர். எனவே வரும் தேர்தலில் நாடார்களின் வாக்கு வங்கியை குறி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு முன்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஏன் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை கூட கல்வித் திருவிழாவிற்கு கரிக்கோல்ராஜ் அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் ஜாதி முத்திரை பதிந்துவிடும் என்று நாடார் மகாஜனசங்கத்தின் கல்வித்திருவிழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தனர். ஆனால் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களை தவறாமல் அனுப்பி வைக்கும் வழக்கத்தை கருணாநிதியும், ஜெயலலிதாவும் வைத்திருந்தனர்.