
ஆர்கே நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திமுகவில் மருதுகணேஷ், அதிமுகவில் 3 அணிகளும், பாஜகவில் கங்கை அமரன் உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடார் கூட்டமைப்பு சார்பில், திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், தண்டையார்பேட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சமத்துவ மக்கள் கழக அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், நேதாஜி நகர், கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு, சேணியம்மன் கோயில் தெரு, வஉசி நகர் நாடார் சமுதாய சங்கம், நாடார் உறவின் முறை சங்கம், வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு தங்களது அமைப்பினர் தரப்பில் ஆதரவு தெரிவிப்பது. அவருக்காக தொகுதி முழுவதும் உள்ள மக்களிடம், வாக்கு சேகரிப்பது. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளர் மருதுகணேஷ், நான் பத்திரிகை நிருபராக இந்த பகுதியை பற்றி நன்கு அறிந்தவன். இங்குள்ள குறைகளை பற்றி பலமுறை செய்தியாக வெளியிட்டுள்ளேன். எனக்கு ஆதரவு அளித்து வாக்களிக்க வேண்டும். உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.