உச்ச நீதிமன்றம் தடை விதித்தும் என்ன பயன்: 98 சதவீத மரங்களை வெட்டி தள்ளிய மும்பை மெட்ரோ

By Selvanayagam PFirst Published Oct 8, 2019, 10:31 AM IST
Highlights

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் இடைக் கால விதித்தது. இருப்பினும், அதற்கு முன்பே 98 சதவீத மரங்களை மும்பை மெட்ரோ நிர்வாகம் வெட்டி சாய்த்து விட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர் பகுதி ஆரே காலனி. இந்த பகுதி ஏராளமான மரங்கள் நிறைந்த இயற்கை வனம் சூழ்ந்த பகுதியாகும். இந்த பகுதியில் மெட்ரோ 3 ரயில் பணிமனை அமைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள சுமார் 2,200 மரங்களை வெட்ட மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து பொதுமக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து மெட்ரோ நிர்வாகம் உடனடியாக ஆரே காலணியில் மரங்களை வெட்ட தொடங்கியது. மரங்களை வெட்ட இடைக்கால தடை விதிக்கும்படி பொதுமக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அதனையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஆரே விவகாரத்தில் தலையிடுமாறு கடிதம் எழுதினர்.

இதன் பலனாக, உச்ச நீதிமன்றம் ஆரே விவகாரத்தை விசாரிக்க தனி அமர்வை அமைத்து நேற்று அவசர வழக்காக விசாரித்தது. அப்போது ஆரே பகுதியில் மரங்களை வெட்ட மும்பை மெட்ரோ நிர்வாகத்துக்கு இடைக்கால தடை விதித்தது. 

இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் 21ம் தேதி மரங்களை வெட்ட கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கழகம் கூறுகையில், மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியான கடந்த வெள்ளிக்கிழமையன்று  முதல் இதுவரை 2,141 மரங்களை வெட்டி விட்டோம். 

அதாவது வெட்ட வேண்டிய 2,185 மரங்களில் 98 சதவீத மரங்களை வெட்டி விட்டோம். தற்போது உச்ச நீதிமன்றம் மரங்களை தடை விதித்துள்ளதால் எஞ்சிய மரங்களை வெட்ட மாட்டோம். அதேசமயம் வெட்ட மரங்களை அகற்றுவது உள்ளிட்ட மற்ற வேலைகளை தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தது.

click me!