சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பை தளர்த்தியுள்ளது மத்திய நிதியமைச்சகம்.
கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுத்து, கட்டமைப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தி, வணிகத்தை மேம்படுத்தும் வகையில், சுயசார்பு பாரதம் என்ற திட்டத்திற்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகவும், அதுகுறித்த விரிவான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுவார் என்றும் பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.
அதன்படி, இன்று அந்த அறிவிப்புகளை வெளியிட்டுவரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். அந்த 15 அறிவிப்புகளில் 6 அறிவிப்புகள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கானது.
அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகவும், எனவே அடமானம் ஏதும் இல்லாமல் சிறு, குறு நிறுவனங்கள் வங்கிக்கடன் பெறலாம் என்றும் மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் துணைக்கடனாக வழங்கப்படும் என்றார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெறும் கடனை ஓராண்டுக்கு திருப்பி செலுத்த தேவையில்லை என்ற சலுகையையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பில் தளர்வுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ஒரு கோடியாகவும், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.