மூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்..!! மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 4, 2020, 7:34 PM IST
Highlights

பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு அதனை மேலும் மோசமாக சிதைத்துள்ளது. குறிப்பாக எம்.எஸ்.எம்.இ எனப்படும் சிறு குறு நடுத்தர தொழில் துறை முன்னெப்போதுமில்லாத பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும், முன்பு மூன்று நிறுவனங்கள் இருந்தது என்றால் அவற்றில் ஒன்றை தற்போது மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அகில இந்திய உற்பத்தியாளர் சங்கம் மற்றும் 9 தொழில்துறை அமைப்புகள் கூட்டாக சேர்ந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர், அதில் எம்.எஸ்.எம்.இக்கள் அதாவது சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர், சுய தொழில் செய்பவர்கள் கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 525 பேரிடம் ஆன்லைனில் கருத்துகேட்டுள்ளனர்.

மே 24 முதல் மே 30 வரை ஒரு வாரம் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது, இதில்தான் சிறு குறு மற்றும் நடுத்தர எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை நடத்துவோரில் 35 சதவீதம் பேரும், சுய தொழில் செய்பவர்களில் 37 சதவிகிதம் பேரும் தங்கள் நிறுவனங்கள் மீட்க முடியாத நிலைக்கு போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.  எம்.எஸ்.எம்.இக்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே தங்களது வணிகம் மூன்று மாதங்களில் நீட்சி அடையும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். 32 சதவீத எம்.எஸ்.எம்.இக்கள் தங்களது தொழிலை மீட்க 6 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளனர. தற்போது நிலவிவரும் நிச்சயமற்ற தொழில் சூழல் எதிர்காலத்திலும் ஆர்டர்களை பெற முடியுமா என்ற  கவலையே அவர்களை இந்த முடிவுக்குத் தள்ளி இருப்பதாக சர்வே கூறுகிறது. 

பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்பு பெரும் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்த தாங்கள் தற்போது கொரோனாவால் வணிகத்தை முழுமையாக மூடும் அளவிற்கு வந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு இந்த அளவிற்கு மோசமான அழிவை நாங்கள் கண்டது இல்லை என்று ஏ.ஐ.எம்.ஓ முன்னாள் தலைவர் கே.இரகுநாதன் தெரிவித்துள்ளார். அதேநேரம் கார்ப்பரேட் நிலைகளிலான நிறுவனங்கள் தரப்பில் இருந்து மட்டும், அதிக தன்னம்பிக்கையுடன் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

 

click me!