டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்திற்கான பணம் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகிறது என பாஜக எம்.பி., பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்
டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்திற்கான பணம் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகிறது என பாஜக எம்.பி., பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், 3 சட்டங்களையும் முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், விவசாயிள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டெல்லி எல்லையில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை என்று பா.ஜ.க., எம்.பி. அக்ஷய்வர் லால் கவுண்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘’ரகேஷ் திகாய்த் ஆயுதமேந்திய கொள்ளைக்கூட்ட கும்பலை சேர்ந்தவர். விவசாயிகளால் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. டெல்லி எல்லையில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகளே அல்ல. அவர்கள் சிக்கிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்.
இந்த போராட்டத்திற்கான பணம் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருகிறது. இந்த பணம் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. உண்மையான விவசாயிகள் போராட்டம் நடத்தினால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும். காய்கறி, பால், உணவு தானியங்கள், பழங்கள் போன்றவை சந்தைக்கு சென்றடைந்திருக்காது’ என்று அவர் தெரிவித்தார்.