ஒரே ஒரு ரூபாய் கட்டணத்தில் 21 கோடி பேருக்கு இன்சூரன்ஸ்!! மோடியின் பட்டையக் கிளப்பும் திட்டம்

By Selvanayagam PFirst Published Feb 1, 2019, 10:16 AM IST
Highlights

மாதம் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தும் வகையில் பிரதம மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தின்  மூலம் இது வரை 21 கோடி ஏழை மக்கள் பயன் அடைந்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
 

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தி முடிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று  பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பெறுப்பு வகிக்கும்  பியூஸ்கோயல் தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நமது நாடு உறுதியற்ற காலத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைத்து பிரச்சனைகளும் சமாளிக்கப்பட்டு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்..

நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சி திட்டங்களும் செய்யப்பட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கார் வகுத்து கொடுத்த சட்ட திட்டத்தின்படி சமூக மற்றும் பொருளாதார நீதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது என அவர் குறிப்பிட்டார்..

நாடு முழுவதும் சுகாதார திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகரமாக இருந்தாலும் சரி, கிராமமாக இருந்தாலும் சரி அனைத்து இடங்களிலும் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், ஏழை-எளிய மக்கள் பலன் பெறும் வகையில் பிரதமரின் புதிய ஆயுள் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல ஏழைகள் உரிய மருத்துவ வசதி பெற மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது மாதம் வெறும் ஒரு ரூபாய் செலுத்தி பிரதம மந்திரி சுரக் ஷா பீம யோஜனா  திட்டத்தின் கீழும், தினமும் 90 காசுகள் கட்டணம் செலுத்தி பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா திட்டத்தின் கீழும் 21 கோடி ஏழை-எளிய மக்கள் பயன் பெற்றுள்ளதாக ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.


தற்போது நாடு முழுவதும் இந்த காப்பீட்டுத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொது மக்களிடையே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

click me!