இந்தியாவின் வளர்ச்சி என்கிற வார்த்தை வெகு தொலைவில் உள்ளது. மில்லியன் கணக்கான குடும்பங்கள் மர அடுப்பை பற்றவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கடுமையாக சாடினார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ’’பிரதமர் நரேந்திர மோடியின் "வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் உள்ளது" என்று கூறியுள்ளார்.
"இந்தியாவின் வளர்ச்சி என்கிற வார்த்தை வெகு தொலைவில் உள்ளது. மில்லியன் கணக்கான குடும்பங்கள் மர அடுப்பை பற்றவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மோடிஜியின் மேம்பாட்டு வாகனம் ரிவர்ஸ் கியரில் உள்ளது. பிரேக்குகளும் தோல்வியடைந்து விட்டது" என்று ராகுல் காந்தி இன்று ட்வீட் செய்துள்ளார்.
விலைவாசி உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் 42 சதவீத மக்கள் உணவு சமைக்க எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர் என்று ஒரு கணக்கெடுப்பு நடத்திய செய்தி அறிக்கையின் ஸ்கிரீன் ஷாட்டையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். இதனால் சிலிண்டர் வாங்க முடியாமல் மீண்டும் விறகுகளை பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தியதை அடுத்து இதனை பகிர்ந்துள்ளார். இந்த உயர்வின் விளைவாக மானியம் இல்லாத 14.2 கிலோ வீட்டு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.899.50 ஆகவும், 5 கிலோ வீட்டு சிலிண்டரின் விலை ரூ.502 ஆகவும் உள்ளது.
ராகுல் காந்தியும், அவரது காங்கிரஸ் கட்சியும் பணவீக்கம் பிரச்சினையில் இருந்து பாஜக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். பாஜக தலைமையிலான ஆட்சியை தாக்கி வருகின்றனர்.கடந்த 1-ம் தேதி முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, ரூ266 உயர்த்தப்பட்டு, ரூ.2000.50 ஆக அதிகரித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, தற்போது ரூ.899.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிலிண்டர் விலை கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கிய இலவச கியாஸ் இணைப்பு, அடுப்பு, சிலிண்டர் ஆகியவற்றை விலை உயர்வால் மறுமுறை சிலிண்டர் வாங்க முடியாமல் ஏழை குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.