ஊரடங்கை நீட்டிக்க ஏன் காத்திருக்கீங்க.. உங்கள் எஜமானரின் குரலுக்காகவா.? எடப்பாடியாரை பிடிபிடித்த கமல்ஹாசன்!

By Asianet TamilFirst Published Apr 13, 2020, 9:38 AM IST
Highlights

நாட்டில் கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழகமோ, ஊரடங்கை நீடிப்பது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஊரடங்கை நீடிக்கும் விஷயத்தில் பிரதமரின் அறிவிப்பை செயல்படுத்துவோம் என்று தலைமைச் செயலாளார் சண்முகம் அறிவித்தார். 

ஊரடங்கை நீட்டிக்கும் விஷயத்தில் எதற்காகக் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வரே? உங்களுடைய எஜமானரின் குரலுக்காகவா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

 
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. அந்த உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்கள் பிரதமரின் அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவித்துவிட்டன. ஆனால்,  நாட்டில் கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழகமோ, ஊரடங்கை நீடிப்பது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஊரடங்கை நீடிக்கும் விஷயத்தில் பிரதமரின் அறிவிப்பை செயல்படுத்துவோம் என்று தலைமைச் செயலாளார் சண்முகம் அறிவித்தார். இதனால், ஊரடங்கை நீட்டிக்கும் விஷயத்தில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் அமைதியாக இருப்பதுபோல தமிழக முதல்வரும் அமைதியாக இருப்பதாகவும் விமர்சனமும் எழுந்துள்ளது.  

இந்நிலையில் இந்த விஷயத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மற்ற மாநில முதல்வர்கள் தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்கிறார்கள். நீங்கள் (எடப்பாடி பழனிச்சாமி) எதற்காகக் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வரே? உங்களுடைய எஜமானரின் குரலுக்காகவா? மக்களிடமிருந்தே என் குரல் வருகிறது. உங்கள் நாற்காலியில் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கையில் விழித்திடுங்கள்” என கமல்ஹாசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

click me!