
ஓ.பன்னீர்செல்வம், சபா நாயகர் தனபால் தவிர்த்து, அதிமுகவில் மொத்தம் 134 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் தொடர்ந்து சசிகலாவுடன் நீடிப்பார்கள் என கேள்வி எழுந்துள்ளது.
ஓ.பி.எஸ்.ஸுக்கு கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டி, மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் பகிரங்கமாக ஆதரவு தெரிவத்தனர்.
இதைதொடர்ந்து அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர், ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், சசிகலாவின் ஆதரவாளர்கள், அவரை கொத்தாக தூக்கி சென்றுவிட்டனர். இதனால், ஒ.பி.எஸ்.ஸுக்கு வெளிப்பாடையாக ஆதவு கொடுத்தவர்களின் எண்ணிக்கை 2 பேர் மட்டுமே.
ஆனால், சசிகலா முகாமில், 131 எம்எல்ஏக்கள் ஆஜராகினர். இதில் தேவர் புலித்துறை அமைப்பை சேர்ந்த திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், காங்கேயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கொங்கு இளைஞர் பேரவை உ.தனியரசு ஆகியோரும் அடக்கம்.
மொத்தமுள்ள 134 பேரில், 34 பேர் தலித் எம்எல்ஏக்கள் ஆவர். அதில் 20க்கு மேற்பட்டோர், ஒ.பி.எஸ்.ஸுக்கு தங்களது ஆதரவை ஏற்கனவே உறுதிபடுத்தியதாக தெரிகிறது.
இவர்கள் மட்டுமின்றி, அதிமுகவில் சரிவர கவனிக்கப்படாதவர்கள், பொறுப்பு கிடைக்காதவர்கள், ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து நன்றாக கவனித்து செய்யப்பட்டால், தாவும் மனநிலையில் உள்ளவர்கள் என கிட்டதட்ட 50 பேர் வரை ஊசலாட்ட மனநிலையில் உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், தனது நெருங்கிய ஆதரவு எம்எல்ஏக்களை கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என ஓ.பன்னீர்செல்வமே கூறியுள்ளாராம். அதிமுக பொது செயலாளர் சசிகலாவின், அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்ந்து, தங்களது அடித்த அடி இருக்கும் என கூறுகின்றனர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.பி.முனுசாமி, நெல்லை மாவட்டத்தில் பி.எச்.பாண்டியன், தூத்துகுடியில் சசிகலா புஷ்பா என 3 பேரும் சேர்ந்து 10க்கு மேற்பட்ட எம்எல்ஏக்களை அழைத்து வர இருக்கிறார்களாம்.
எனவே, நாளை அல்லது நாளை மறுநாள்தான் யாருக்கு எவ்வளவு எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.
டெய்ல் பீஸ்
அதிமுக தலைமை செயலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில், 131 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறினர். அனால், சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.