பணியை முறையாக செய்யாத விஏஓ…. வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த எம்எல்ஏ !!

By Selvanayagam PFirst Published Jun 8, 2019, 7:24 AM IST
Highlights

திருவாரூர் அருகே வாய்க்கால் சீரமைக்கும் பணியை பார்வையிட வராத விஏஓவை மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் நீரை பேரையூரைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், வாய்காலின் இருபுறமும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதனால், 10 மீட்டர் இருந்த வடவாறு வாய்காலின் அகலம், 5 மீட்டராகக் குறைந்தது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.

இதை அறிந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அப்பகுதிக்கு சென்று வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார். அப்போது, பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்தார்.  ஆனால் அந்த கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைக்கு வரமால், வேறு பணி இருப்பதாக சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று வெற்றிலை, பாக்கு அடங்கிய  தாம்பூல தட்டு வைத்து, ஆய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விஏஓ உடனடியாக பார்வையிட வருவதாக தெரிவித்தார்.

அந்த விஏஓ உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்படுவதால், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருக்கின்றனர்என்று  அப்பகுதி மக்கள் குற்றசாட்டி உள்ளனர்.

மன்னார்குடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்ற பொழுது ஆய்வுக்கு வர மறுத்த ஒரு அதிகாரியை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். இனிமேலும், அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன் என எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி,ராஜாவின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டிவருகின்றனர்.

click me!