எட்டுவழிச்சாலை திட்டத்தில் மக்கள் மன்றம் கொட்டு வைக்கும்... எடப்பாடியாருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Dec 8, 2020, 7:02 PM IST
Highlights

”எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாஜக - அதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தக்க பாடம் புகட்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 
 

”எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாஜக - அதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தக்க பாடம் புகட்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’விவசாயிகள் தமது வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என  உச்சநீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு,  விவசாயிகள் மற்றும் இயற்கை - சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த  ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அ.தி.மு.க. அரசு கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்காதது இதற்கு முக்கிய காரணமாகும். மத்திய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்தாகக் காரணம் ஆகிவிட்டது

.

எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு- வளர்ச்சி என்ற போர்வையில்  விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய  பாடத்தை  வாக்குச் சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும். விவசாயிகளின் நலனைத் துச்சமென நினைத்து,  “கமிஷன்” என்ற ஒரே நோக்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த அராஜகமாக- காவல் துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளின் மீது தடியடி நடத்திய முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, இனியேனும் விவசாயிகளின் நலன் காத்திட முன் வருவாரா?

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, மீண்டும்  இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. ஆகவே  சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக் கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!