திண்ணைப் பிரச்சாரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஸ்டாலின்!! குடும்பப் பெண்கள் குஷியோ குஷி

By sathish kFirst Published May 15, 2019, 5:55 PM IST
Highlights

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து வீதி வீதியாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்ட ஸ்டாலின், குடும்பப் பெண்கள் குஷியில் ஆழ்த்தும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து  வீதி வீதியாகச் சென்று  திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்ட ஸ்டாலின், குடும்பப் பெண்கள் குஷியில் ஆழ்த்தும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அத்தொகுதிக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று  திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்ட ஸ்டாலின்  மக்களிடம்  பேசுகையில், கேபிள் கட்டணம் 250 ரூபாய், 300 ரூபாய் அளவுக்கு உயர்ந்துவிட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் ஆட்சியில் இருந்த 100 ரூபாய் கட்டணத்தை மீண்டும் கொண்டுவருவோம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறீர்கள்; கடன் தள்ளுபடி செய்கிறீர்கள்; அதை மறுக்கவில்லை. ஆனால் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்கு என்ன செய்வீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அதற்காகவே இப்போது ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறோம். வறுமையின் காரணமாக நகைகளை அடைமானம் வைத்து கடன் கட்ட முடியாமல் தவித்து வரும் ஏழைகளுக்கு உதவும் வகையில் 5 பவுன் வரையிலான தங்க நகைக்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். அதேபோல மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். நாங்கள் சொன்னதைச் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம் என்று கலைஞர் சொல்வார் நானும் அதே உறுதியை இப்போதும் தருகிறேன் என்றார்.

மேலும் மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசும் தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “விரைவில் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்க உள்ளது. அதற்குத் திருப்பரங்குன்றத்தில் சூரியன் உதிக்க வேண்டும். எனவே நீங்கள் எல்லோரும் திமுகவை ஆதரிக்க வேண்டும்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்க மாட்டார். மத்தியில் ராகுல் தலைமையில் நல்லாட்சி அமையும். மாநிலத்திலும் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றார்.

click me!