புளுகு மூட்டையை இத்தோட நிறுத்திகோங்க... முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jul 12, 2019, 5:55 PM IST
Highlights

நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க அ.தி.மு.க அரசு, தி.மு.க. மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க அ.தி.மு.க அரசு, தி.மு.க. மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் - தி.மு.க தான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் என்று முதல்வர் பழனிச்சாமி பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது  முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான். 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார். ஆகவே தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் இருந்த போதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு இன்றைக்கு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. 

இப்போது நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடி பணிந்து- அதிமுக ஆட்சி இன்றுவரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறமுடியாமல் நீட் தேர்வை “பா.ஜ.க.வுடன் கூட்டணி” வைத்து தமிழகத்தில் அமல்படுத்தியது அ.தி.மு.க ஆட்சிதான். 

அது மட்டுமல்ல நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும் 21 மாதங்கள் அதை மறைத்து அரசியல் சட்டப் பிரிவில் “வித்ஹெல்டு” என்ற வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டமன்றத்திற்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சரும்தான்! ஏன் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதும் அ.திமு.க.தான். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரை வார்த்து விட்டு பா.ஜ.க.வின் “நீட் தேர்வு” மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதல்வர் பழனிச்சாமி. 

ஆகவே நீட் தேர்வில் அதிமுக ஆட்சியின் பச்சைத் துரோகத்தை முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பதற்காக, தி.மு.க. மீது “கோயபல்ஸ்” பிரச்சாரத்தில் ஈடுபடும் முதல்வரும் அவரது “சுகாதார” மற்றும் “சட்ட” அமைச்சர்களும் தமிழகத்தின் “சாபக்கேடுகள் “ என்றே எண்ணத் தோன்றுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது எங்கள் அம்மாதான்” என்கிறார். ஆனால் “பிரியதர்சினி” என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, அம்மையார் ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை மறைத்து விட்டார் என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

click me!