ரூ.5 லட்சம் கோடி எங்கே..? முதல்வருடன் அமைச்சர்கள் வெளிநாடு செல்லும் மர்மம் என்ன..? மு.க.ஸ்டாலின் கிடுக்குப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2019, 2:29 PM IST
Highlights

முதல்வர் மட்டும் போய் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். வாழ்த்துவார்கள். ஆனால், ஒரு அமைச்சரவையே வெளிநாட்டுக்கு போய்  சுற்றுலா அமைச்சரவையாக அ.தி.மு.க ஆட்சி மாறி இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

முதல்வர் மட்டும் போய் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். வாழ்த்துவார்கள். ஆனால், ஒரு அமைச்சரவையே வெளிநாட்டுக்கு போய்  சுற்றுலா அமைச்சரவையாக அ.தி.மு.க ஆட்சி மாறி இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில், பேசிய அவர், ‘’இன்றைக்கு நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளில் தொடர்ந்து 10 நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி என்னவென்றால், இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி 5 சதவீதத்துக்கு கீழே சென்றுள்ளது என்பதுதான்.

இது 27 ஆண்டு காலமாக இல்லாத கொடுமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த செய்திகளை கூட ஊடகங்களில் பெரிதாக பார்க்க முடியவில்லை. இதை மூடி மறைக்கும் செயல்கள்தான் நடக்கிறது. சமூக வலைதளங்களில் தான் அதிகம் இது போன்ற தகவல்கள் வெளியாகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாடு சிக்கித்தவித்து கொண்டிருகிறது. இதையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடந்துள்ளது.

அது மட்டுமல்ல காஷ்மீர் பிரச்சினையையும் முன்னுறுத்தி காட்டுகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு சென்று தொழில் முதலீடுகளை கொண்டு வர போய் உள்ளார் என்கிறார்கள். முதல்வர் மட்டும் போய் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். வாழ்த்துவார்கள். ஆனால், ஒரு அமைச்சரவையே போய் உள்ளது. இன்னும் 8 அமைச்சர்கள் வெளிநாடு போக இருக்கிறார்களாம். எனவே சுற்றுலா அமைச்சரவையாக அ.தி.மு.க ஆட்சி மாறி இருக்கிறது.

வெளிநாடு செல்லட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இதே தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெற்றோம் என்று புள்ளி விவரத்தை தெரிவித்து, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டதாக கூறினார்கள்.

ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இதில் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு வந்ததாக தெரிவித்தனர். இரண்டையும் கூட்டி பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அளவு முதலீடு வந்தாக பார்க்கிறோம்.

ஆகவே எவ்வளவு முதலீட்டை தமிழகம் பெற்றுள்ளது. அதில் எவ்வளவு பேர் தொழில் தொடங்க முன் வந்துள்ளனர்? அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் இதுவரை அதை வெளியிடவில்லை.

இந்த நிலையில் நீங்கள் வெளிநாட்டுக்கு போய் முதலீடுகளை ஈர்க்க போவதாக கூறி வருகிறீர்கள். நாங்கள் கேட்பது, ஏற்கனவே இருந்த நிலை என்ன? என்பதுதான். இப்போது 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டதாக செய்தி வருகிறது. இவை அனைத்தும் அறிவிப்புகளாக இருக்கிறதே தவிர உண்மையிலேயே செயல்படுத்தும் நிலையில் இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்’’ என அவர் கூறியுள்ளார்.


 

click me!