பதவியேற்றதும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு !! அசத்திய முதலமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Dec 15, 2018, 10:29 PM IST
Highlights

மிசோரம்  முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட ஜோரம்தாங்கா  பூரண மதுவிலக்கு சட்டத்தில் தனது முதல் கையெழுத்தை போட்டு அசத்தினார்..

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த மிசோரம்  மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில், 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மிசோ தேசிய முன்னணி உருவெடுத்துள்ளது.

இதையடுத்து, முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காகக் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் ஐசாலில் நேற்று நடைபெற்றது.. இதில், கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா, சட்டமன்றக் கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஆளுநர் ராஜசேகரனிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட்டது. ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

மிசோரம் மாநிலத்தில் ஏற்கனவே 1998 முதல் 2008  வரை  தொடர்ந்து 2 முறை முதலமைச்சராக இருந்த ஜோரம்தாங்கா  தற்போது 3ஆவது முறையாக பதவி ஏற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் நடந்த பதவியேற்பு விழாவின் போது ஆளுநர் ராஜசேகரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

மிசோரம் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டால் தனது முதல் கையெழுத்து  பூரண மதுவிலக்கு சட்டத்தில் தான் என ஜோரம்தாங்கா  தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் பதவியேற்றக் கொண்டவுடன் பூரண மதுவிலக்கு சட்டத்தில கையெழுத்திட்டுள்ளார்.

click me!