சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இரட்டை இலையை மீட்கவும், கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்றவும் சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.
மேலும், மாவட்ட செயலாளர்கள், தங்கள் கருத்தை வெளிப்படையாக கூறலாம், உங்கள் கருத்துக்களையும் கேட்டுதான், எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், மாவட்ட செயலாளர்கள் யாரும் தங்களது கருத்துக்களை முன்வைக்கவில்லை. அதே சமயம், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மட்டும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார்.
அவர் பேசும்போது, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே நேரத்தில் சசிகலாவை ஒதுக்கி வைக்க வேண்டுமா? என்பதை யோசித்து செய்ய வேண்டும் என்றார்.
அத்துடன், 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா. நல்லது, கேட்டது என அனைத்திலும் அவர் உடன் இருந்தவர். தற்போதும், ஜெயலலிதாவுக்காகதான் சசிகலா சிறைக்கு சென்றுள்ளார். எனவே, அவரை ஒதுக்கி வைப்பது எனக்கு சரியாக படவில்லை என்றும் கூறி உள்ளார்.
அவர் பேசியதை தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், எழுந்து நின்றோ, மேடைக்கு வந்தோ யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லை.
அவர்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி கூட்டத்தை முடித்து வைத்த முதல்வர் எடப்பாடி, அதன் பின்னர் வேலுமணி, செங்கோட்டையன், ஜெயகுமார் ஆகியோரிடம் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார்.