
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டு பதிவு செய்வதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைதொடர்ந்து அடுத்தடுத்து 2 இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஜாமினில் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து புழல் சிறையில் இருந்து 19 நாட்களுக்கு பிறகு இன்று காலை வெளியேறினார். இதனையடுத்து பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அப்போது சிறையில் தனக்கு நேரிட்ட அனுபவங்களை அவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டது வரை தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை விவரித்தார். கடந்த மாதம் 21 ஆம் தேதி வீட்டில் இருந்த தன்னை கைது செய்த போலீசார், போலீஸ் வாகனத்திலேயே வைத்து தன்னை வைத்து கொண்டு 3 மணி நேரம் சென்னையை சுற்றி காண்பித்ததாக கூறினார். 3 மணி நேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் கூட கொடுக்கவில்லையென தெரிவித்தவர், அதிகாலை 2 மணிக்கு தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தீவிரவாதிகளை அடைத்து வைக்கும் சிறையில் தன்னையும் போலீசார் அடைத்ததாக குற்றம்சாட்டினார்.
தீவிரவாதி போல் சித்தரிப்பு
சிறையில் தனக்கு கட்டில் வசதி, தண்ணீர் வசதி என எதுவும் இல்லையென்றும் 19 நாட்கள் கொசுக்கடியில் அவதிபட்டதாக தெரிவித்தவர், கட்டாந்தரையில் தான் போலீசார் தன்னை படுக்க வைத்தாக வேதனையோடு கூறினார். தான் இருந்த அறையை சுற்றிலும் 100க்குமேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து இருந்ததாகவும், தீவிரவாதி போல் தன்னை போலீசார் சித்தரித்தாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.மேலும் தன்னை சந்திக்க வந்த ராயபுரம் அதிமுக தொண்டர்களிடம் தனது உடம்பில் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவ பரிசோதனையை செய்த பிறகு தான் தெரியவரும் என கூறியவர், கொசுக்கடியால் பாதிக்கப்பட்டதால் ரத்த பரிசோதனைக்கு செய்ய இருப்பதாகவும் நகைச்சுவையுடன் தனக்கு சிறையில் நேர்ந்தவைகளை விவரித்தார்.
தவறு செய்தவர்களுக்கு சோபா,ஏசியுமா கொடுப்பாங்க?
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தவறு செஞ்சிட்டு ஜெயிலுக்கு போன என்ன சோபாவும், ஏசியுமா கொடுப்பாங்க என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்தார். இவர் இதுக்கே இப்படின்னா சுதந்திர போராட்ட காலத்தில் இதைவிட பயங்கர கொடுமையாக இருக்கும் என கூறியவர், அடுத்தமுறை ஜெயக்குமார் சிறை செல்லும்போது வேணா கூட இருக்கிறவங்க இரண்டு பேரை கூட்டிட்டு போக சொல்லுங்க என கூறிட்டு நல்ல விஷயத்தை ஏதாவது பேசுங்கப்பா என ஜெயக்குமார் தொடர்பான பேச்சை முடித்து விட்டார்.