Senthil Balaji : டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு? விளக்கமளித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி!!

By Narendran SFirst Published Jan 3, 2022, 2:27 PM IST
Highlights

டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருவதாகவும் டெண்டரில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருவதாகவும் டெண்டரில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற பார் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா?, காத்திடு காத்திடு 3 லட்சம் தொழிலார்களை காத்திடு என்று பல்வேறு வாசகங்களை கூறியும், பதாகைகளை ஏந்தியும் இன்று காலை முதல் தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பார் உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். இளமையான அமைச்சர்கள் பலரை நியமித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி டெண்டரை முறைப்படி நடத்தாமல் நடத்தி இருக்கிறார். முறையான கையெழுத்து இல்லாமல், இட அனுமதி பெறாமல் முறைகேடு நடந்துள்ளது. அமைச்சரின் பினாமிகள் பெயரின் கீழ் பார்களை நடத்த ஆசைப்படுகிறார். எந்தவித ஆவணமும் இல்லாதவர்கள் இந்த டெண்டரில் கலந்து கொள்கிறார்கள். இதுத்தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுக்கு  முறையான டெண்டரை விட வேண்டும். இந்த முறைகேடான டெண்டரில் கரூர், அரவக்குறிச்சி, கோவை என அவர்களுக்கு, அதாவது அமைச்சரின் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் இதனை சரி செய்ய வேண்டும். நாங்கள் புகார் மனுவை கொடுக்க தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வந்தோம். ஆனால், எங்களை சரியாக நடத்தவில்லை. அதனால் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருவதாகவும் டெண்டரில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டாஸ்மாக் பார் டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருகிறது. டெண்டரில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை. ஆன்லைன் மூலம் பார் ஏல படிவம் யார் வேண்டுமானாலும் பெறமுடியும். 2019ல் 5387 பார்களுக்கு 6,482 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, இந்த ஆண்டு 11,715 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. 3 மாதத்தில் 2,132 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; 30,000 விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு விலையில்லா மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

click me!