உலகத்தரத்தில் அரசு பள்ளி மாணவர்கள்... ரோபோட் டிக்ஸ்... ஸ்மார்ட் வகுப்பறை!! அந்தர் பண்ணும் செங்கோட்டையன்

By sathish kFirst Published May 7, 2019, 12:25 PM IST
Highlights

 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, கல்வித்துறைக்கு தனிச்சேனல், ரோபோட் டிக்ஸ்  என அரசு பள்ளி மாணவர்களை உலகத்தரத்தில் உயர்த்தியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 

7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, கல்வித்துறைக்கு தனிச்சேனல், ரோபோட் டிக்ஸ்  என அரசு பள்ளி மாணவர்களை உலகத்தரத்தில் உயர்த்தியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 

இன்று பழனி முருகன் கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; இந்தியாவிற்கே தமிழகம் ஒரு வழிகாட்டியாக தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப், பேக் என  இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து துறையை விட பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

2019 - 2020 கல்வியாண்டில் 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே 37 லட்சம் மாணவர்கள் லேப்டாப் பெற்றுள்ள நிலையில் 6 ஆண்டு காலத்தில் மொத்தமாக 65 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படுவது அரசின் சாதனை.

உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் பள்ளிகல்வி துறையில் வழங்கப்பட்ட சலுகைகள் தான். இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்நெட்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது.

நடமாடும் நூலகத்தில் உள்ள நடைமுறைச் சிக்கலால் மாணவர்களின் லேப்டாப்களிலேயே புத்தகங்களை அறிந்து கொள்ளும் வகையில் இணைய நூலகம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளுக்குப் பிறகு கல்வித்துறைக்கு தனிச்சேனல் ஏற்படுத்தப்படும். 

அதுமட்டுமல்ல ரோபோட் டிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், காலியாக உள்ள சுமார் 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலவழிக்கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

click me!