பொங்கல் பரிசு ஊழல் விவகாரம்... எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய்... அமைச்சர் சக்கரபாணி பதிலடி!!

By Narendran SFirst Published Jan 20, 2022, 7:55 PM IST
Highlights

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் செய்ததாகவும், தரமற்ற பொருள் வழங்கியதாகவும்  ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  தெரிவித்துள்ளார்.  

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் செய்ததாகவும், தரமற்ற பொருள் வழங்கியதாகவும்  ஈபிஎஸ் கூறுவது அப்பட்டமான பொய் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி  தெரிவித்துள்ளார்.  பொங்கல் பண்டியைகை முன்னிட்டு தமிழகத்தில் சுமார் 1,297 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும், துணிப்பை மற்றும் கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பொருட்கள்  தரமற்றவையாக  இருப்பதாக விநியோகிக்கப்பட்ட  முதல் நாள் முதல் புகார்கள் வரத் தொடங்கின.

Latest Videos

பொங்கல் பரிசு பொருட்களில் கலப்படம் இருப்பதாகவும்,  வெல்லம் உருகி இருந்ததாகவும், புளியில் பல்லி, மிளகில் கலப்படம் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொங்கல் பண்டிகை முடிந்தும் சில இடங்களில் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், புகார்களும் தொடர்ந்து எழுந்தன. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே பொங்கல் பரிசு பொருட்கள் புகார்கள் குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில்  ஆலோசனை நடத்த உள்ளார். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட  அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில்  பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் என எடப்பாடி பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறுகிய காலத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் தரமாக வழங்க உரிய விலை புள்ளி கோரப்பட்டது என்றும்,  அதிமுக ஆட்சியில் கோடிகளை கொள்ளையடித்ததை நினைத்து பொங்கல் தொகுப்பில் ஊழல் என எடப்பாடி கூறுவதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும் சில இடங்களில் தரமற்ற பொருட்கள்  வழங்கப்பட்டதை மாற்றி கொடுத்ததோடு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!