மாதந்தோறும் 500 பேருக்கு வேலை வாய்ப்பு... அமைச்சர் கே.என்.நேருவின் அதிரடி ஏற்பாடு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 11, 2021, 2:20 PM IST
Highlights

ஆண்டு முழுவதும் ‘திசை காட்டும் திருச்சி’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இதன் மூலம் மாதந்தோறும் 500 பேருக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு அறிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடியால் வேலையில்லா திண்டாட்டம், ஊதிய குறைப்பு ஆகிய பிரச்சனைகள் பணியாளர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. குறிப்பாக ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அமைச்சர் கே.என்.நேரு அசத்தலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அக்கறைகளுள் ஒன்று, இன்றைய இளைஞர்களுக்கும், கொரோனா பரவல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2021 தேர்தல்  அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் திருச்சி இளையோரை மையமாக வைத்து நம்பிக்கையூட்டும் இணைய வழி வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்கிறேன். ஒவ்வொரு மாதமும் 500 பேருக்கேனும் வேலை வாய்ப்பு பெற்றுத்தர வேண்டுமென்ற நோக்குடன் இந்த வேலை வாய்ப்பு இயக்கத்தை தொடங்குகிறோம்.  கொரோனா காலத்தில் நேரடி வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்துவது என்பது கடினம். எனவே இணைய வழியில் ஏற்பாடு செய்துள்ளேன். நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற உள்ளது. 


நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க இசைந்துள்ளன. முதல் சுற்றில் குறைந்தபட்சம் 2000 பேருக்கு வேலை உத்தரவு கிடைக்கும்  நம்புகிறோம். பங்கேற்க ஆர்வ முள்ள இளைஞர்கள் www. aramhr.com இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது 85966992244 எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம், விபரங் அறிந்து கொள்ளலாம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டு முழுதும் “திசைகாட்டும் திருச்சி வேலை வாய்ப்பு முகாம்" நடைபெறும். 

எனவே முதற்கற்றில் வேலை கிடைக்காதவர்கள் மனச்சோர்வு கொள்ள வேண்டாம். மிக முக்கியமாக நேர்காணலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி களுக்கும் ஒழுங்கு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக ஒன்றிய அரசு மற்றும் தமிழகஅரசுப் பணிகளுக்கான தேர்வுப் பயிற்சிகளையும் விரைவில் தொடங்க ஏற்பாடு செய்து வருகிறோம். 

எல்லோருக்கும் வாழ்வு என்பதே திசைகாட்டும் திருச்சி இயக்கத்தின் நோக்கம். எனவே திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள தொழில் வணிக நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைக்கிறோம். மிக முக்கியமாக பொது நல அமைப்புகளும் தன்னார்வலர்களும் இனைந்து இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நமது இளையோர்கள் ஒருவர் கூட வேலையின்றி இருக்கக்கூடாது என்பதை லட்சியமாக கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். 

click me!