
ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனனை, அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளர்.
இபிஎஸ் – ஓபிஎஸ் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த மறுநாளே சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது.
இரட்டை இலை சின்னத்தை ஒற்றுமையாக இருந்து பெற்ற இபிஎஸ் – ஓபிஎஸ் அணியினர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் அக்கட்சி திணறி வந்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? மதுசூதனனா ? பால கங்காவா? கோகுல இந்திராவா? என்பது குறித்து அதிமுக தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த முறை ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுவது குறித்து டிடிவி தனிகரன் ஆதரவாளர் புகழேந்தி, மதுசூதனனை அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து புகழேந்தி, சேலத்தில் இன்று செய்தியாளர்களிடடிம் பேசினார். அப்போது, டிடிவி தினகரனுக்கு ஆர்.கே.நகர் மக்கள் ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்றும் புகழேந்தி கூறினார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனை அமைச்சர் ஜெயக்குமாரே தோற்கடிப்பார் என்றும் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும்தான் தகராறு. எங்களுக்கு தகராறு கிடையாது என்று கூறினார்.
மேலும், ஜெயலலிதாவின் மகள் என கூறும் பெங்களூரு அம்ருதாவிடம் சிறு ஆதாரம் கூட கிடையாது என்றும் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.