தமிழகத்தையே சூறையாடிய கொள்ளைக்கும்பல் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சனம் செய்வதா என டி.டி.வி.தினகரனை அமைச்சர் ஜெயகுமார் ஆவேசமாக திட்டித் தீர்த்தார்.
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு டி.டி.வி.தினகரனை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்கவும் முடிவுசெய்துள்ள எடப்பாடி தரப்பு அதற்காக வரும் 12 ஆம் தேதி பொதுக் குழு கூட்டத்தை கூட்டவுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் குறித்து செய்தியளார்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ஜெயகுமார் ஒரு பஃபூன் என விமர்சனம் செய்தார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தை சூறையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள் என கடுமை காட்டினார்.
என் கேள்விக்கு பதிலளிக்க துணிவில்லாதவர்கள் என்னை கீழ்தரமாக விமர்சிக்கிறார்கள் என்று கூறிய அமைச்சர் ஜெயகுமார், டி.டி.வி.தினகரனை வக்கில்லாதவர்கள், துப்பில்லாதவர்கள், தரங்கெட்டவர்கள் என ஆவேசமாக திட்டித் தீர்த்தார்.
டி.டி.வி.தினகரன்தான் அதிமுகவின் பஃபூன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சட்டசபையில் அறுதி பெரும்பான்மையை நிரூபிப்போம்.
என்றும் திட்டமிட்டபடி செப்டம்பர் 12 ல் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்..
ஜக்கையன் போல் தினகரன் முகாமிலிருந்து மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று கூறிய அமைச்சர். கட்சி விதிப்படி 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.