மாடியில் இருந்துகொண்டு குடிசையை பார்க்கும் கமல்ஹாசனால் ஏழை மக்களின் கஷ்டங்களை உணர முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் கமல்ஹாசன், அண்மையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விமர்சித்து வார இதழில் எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாகவும் கமல் கருத்து தெரிவித்திருந்தார். மக்கள் சந்திக்கும் இன்னல்களை கருத்தில்கொண்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை மைலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் மாடியில் இருந்துகொண்டு ஏழை மக்களை பார்ப்பவர். எனவே அவர்களின் கஷ்டங்களை கமலால் என்றைக்குமே உணர முடியாது. நாங்கள் குடிசையில் இருந்து குடிசை மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டவர்கள். கமல் பொத்தாம் பொதுவாக பேசுகின்றவர். அதிமுகவை மட்டுமே குறிவைத்து உள்நோக்கத்துடன் விமர்சிப்பவர். அதனால் அவரது விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.