
இரட்டை இலை சின்னத்தை முடக்க தினகரன் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் ஆனால் அவரது எண்ணம் ஈடேறாது எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக டெல்லி சென்றுள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இரட்டை இலை சின்னத்தை முடக்க தினகரன் முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டினார். ஆனால் தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் ஆகியவற்றை முறையாக தாக்கல் செய்துள்ளதால் சின்னம் முடக்கப்படாது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் ஏரிகள், குளங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் உயரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேபோல, சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வெள்ள பாதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.