இது தான் அரசியல் நேர்மையா? மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம்.. வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம்..!

Published : Apr 29, 2023, 11:48 AM ISTUpdated : Apr 29, 2023, 11:50 AM IST
இது தான் அரசியல் நேர்மையா? மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம்.. வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம்..!

சுருக்கம்

மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். 

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம்  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- 1993 ஆம் ஆண்டு மதிமுக துவங்கப்பட்ட காலத்தில், அன்று கழகத்தின் நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் பலர் தாங்கள் அரசியலுக்கு நுழைவதற்கு முன்பே திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, திமுகவை வளர்த்தவர்கள் என்பதும், உங்களை திமுகவை விட்டு வெளியேற்றிய போது அதுவரை பாடுபட்டு வளர்த்த திமுகவை விட்டு விலகி உங்களுக்காக நியாயம் கேட்டு உங்களை முன்னிலைப்படுத்தி மதிமுக உருவான போது தங்களோடு இணைந்து பாடுபட்டவர்கள். 

மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவிற்கே சென்று விட்டனர். உங்களிடம் நேர்மையும், உண்மையும் இருக்குமானால் ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொண்டவர்களையும், புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும் ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலியில் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியுள்ளது இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமை மதிமுவிற்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில், விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பத்திரிக்கைக்கு செய்தி வெளியிடுவதும், அவருக்கே திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கழக தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி பத்திரிக்கை செய்தி வெளியிடுவதும், மீண்டும் அவருக்கே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவதும் தான் அரசியல் நேர்மையா?

அன்று திமுகவில் தங்களுக்கு ஒரு இடர்பாடு வந்த போது எந்த குடும்ப அரசியலுக்கு எதிராக தொண்டர்களை தூண்டினீர்களோ அன்று ஒரு நிலைப்பாடும், இன்று அதற்கு நேர் எதிர்மாறாக தங்களின் குடும்பத்தினருக்கு தன்னிச்சையாக கழகத்தில் பொறுப்பு வழங்க முயற்சிக்கும் போது தொண்டர்கள் மத்தியில் தாங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பதும் மகனை ஆதரித்து, அரவனைப்பதும் தங்களின் சந்தர்பவாத அரசியலையும் பொது வெளியில் கழகத்தினரின் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் உள்ளது வருந்ததக்க வேதனையான நிகழ்வே என கூறியுள்ளார். 

வைகோவின் மகன் துரை வைகோவிற்கு  தலைமை கழக செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட போதுது கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் திருப்பூர் துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!