செப்டம்பரில் +2 பொதுத்தேர்வு?... முதல்வரிடம் இன்று இறுதி அறிக்கை ஒப்படைப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 5, 2021, 4:09 PM IST
Highlights

அனைத்து தரப்பினரும் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். 

கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ 12 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தன. இதையடுத்து தமிழகத்திலும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக, கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு தெரிவிக்கும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். பெற்றோர்களிடம் ஆன்லைன் மூலமாக கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வி அலுவலர்கள், கல்வியாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். 

இன்று சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 13 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக, விசிக, மமக, கொ.ம.தே.க. மதிமுக, த.வா.க. ஆகிய கட்சிகள் 12ம் வகுப்பு தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்ததாகவும், பாமக, கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் அனைத்து தரப்பினரும் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். பெரும்பாலானோரின் கருத்துக்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்பதாகவே உள்ளதாக கூறப்படுகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, வரும் செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலானோர் தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பொதுத் தேர்வை ரத்து செய்யாமல் செப்டம்பரில் தேர்வை நடத்த அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

click me!