முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம்..!! அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2020, 10:31 AM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தங்கள் தேவைகளுக்காக வெளியே வருகின்ற நிலை அவ்வப்போது காணப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 6, 9, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் அவர்கள் தலைமையில் ரிப்பன் மாளிகை  கூட்டரங்கில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை மற்றும் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு பல்வேறு ஐ.சி.இ நடவடிக்கைகளின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தங்கள் தேவைகளுக்காக வெளியே வருகின்ற நிலை அவ்வப்போது காணப்படுகிறது.

எனவே அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் வங்கிகள் கடைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத தனி நபர்கள் மீதும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் உள்ள இடங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீதும் அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் அந்த நிறுவனங்களை மூடி சீல் வைக்க வேண்டும். மேலும் வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களிலிருந்து தொழில் நிறுவனங்களில் பணிபுரிய சென்னைக்கு வரும் நபர்கள்  மற்றும் இ-பாஸ் பெற்றுவரும் நபர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். 

தற்போது பருவமழை துவங்கவுள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் போன்ற பருவ மழை கால காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீடுகள்தோறும் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு  பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரிடமும் வீட்டிற்குள்ளும் சுற்றுப்புறத்திலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாக  ஏதுவான நீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் மேற்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் உருவாகும் வகையில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதை 100% உறுதி செய்து, அது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியில் சென்ற தனிநபர்கள் மற்றும் அரசின் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 1-4-2020 முதல் 26-8-2020 வரை 1,83,44,067 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். 

 

click me!