கொரோனா வார்டில் பல மணி நேர பணி..! அரசு மருத்துவமனைகள் குறித்து டாக்டர்கள் சங்கம் வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2020, 12:10 PM IST
Highlights

இவ்வாறு தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்துபவர்கள், மனிதநேயமற்ற முறையில் ஊழியர்களை நடத்துபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு  தொடர்ச்சியாக பல மணி நேர கோவிட் -19 வார்டு பணி வழங்குவது கடும் கண்டனத்திற்குரியது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- தமிழக அரசு மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், போதிய  மருத்துவர்கள் இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவர்கள் பல கட்டப் போராட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தியும், அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கென்று படுக்கைகளின் எண்ணிக்கைகளை தமிழக அரசு அதிகரித்துள்ளது. இது வரவேற்புக்குரியது. 

ஆனால், படுக்கைகளை அதிகரித்ததற்கு ஏற்ப  மருத்துவர்களையோ, செவிலியர்களையோ அரசு அதிகரிக்க வில்லை. இதனால் கடுமையான பணிச்சுமைக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளாகி உள்ளனர். தொடர்ச்சியாக 6 மணி நேரத்திற்குமேல் கோவிட் வார்டில் யாருமே பணியாற்ற முடியாது. பணியாற்றக் கூடாது. அவ்வாறு பணியாற்றினால் ,வைரஸ் தொற்றுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். இந்நிலை அவ்வாறு பணியாற்றுபவர்களின் உடல் மட்டும் உள நலத்தை பாதிக்கும்.  நாள்தோறும் 6 மணி நேர பணியை ஒரு வாரத்திற்கு செய்த பின், சுகாதார பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு கொரானா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். இது குறித்து அரசு அறிவிக்கைகள் இருந்தும் கூட  சில மருத்துவமனைகள் அவ்விதிகளை பின்பற்றுவதில்லை. 

உதாரணத்திற்கு சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில், அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக 12 மணிநேரம், 24 மணிநேரம் என்று கோவிட் -19 வார்டு பணி வழங்கப்பட்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாக  96 மணி நேரத்திற்கு (4 நாட்களுக்கு), தொடர்ச்சியாக கோவிட் -19 வார்டு பணி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்களை தொடர்ச்சியாக பல மணிநேரங்கள் பணியாற்றச் செய்வது கண்டனத் திற்குரியது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். மனிதாபிமானமற்ற செயல். தொழிலாளர் விரோதப் போக்காகும்.இவ்வாறு தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்துபவர்கள், மனிதநேயமற்ற முறையில் ஊழியர்களை நடத்துபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவியை தமிழக அரசு வழங்கிட வேண்டும். 

மருத்துவர்கள்,பயிற்சி மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோருக்கு தொடர்ச்சியாக  24 மணி நேர வேலை செய்ய உத்திரவிடக்கூடாது. இது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழகம் முழுவதும் வட்டார மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும்,மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.விடுப்புகளும் வழங்கப்படவில்லை. அரசு  மருத்துவமனையில் பணிபுரியும் பல ஒப்பந்த செவிலியர்களுக்கு , மகப்பேறு விடுப்புக்கான  ஊதியம், மகப்பேறுக்குப்பிறகு 2 முதல் 5 ஆண்டுகள் கழித்தும் கூட வழங்கப்படவில்லை.எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கே மகப்பேறு விடுப்புக்கு  ஊதியம் வழங்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.  உடனடியாக அவர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும். எனவே, இக்குறைபாடுகளை போக்கிட உடனடியாக  நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

 

click me!