கொரோனாவை கட்டுப்படுத்த கமல்ஹாசன் கொடுத்த ஐடியா..!! தமிழக அரசுக்கு சரமாரி அட்வைஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 8, 2020, 2:41 PM IST
Highlights

இது மக்கள் மருத்துவரை சந்திக்க மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாக காத்திருப்பதை தவிர்ப்பதுடன், அதில் ஆகும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். அதேவேளையில் அனைத்து ஆய்வகங்களில் பரிசோதனை உபகரணங்கள் போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும். 

ஆய்வகங்களிலோ மருத்துவமனைகளிலோ மக்கள் கூடுவதை தவிர்க்க பரிசோதனைகளை ஆய்வக ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீட்டிற்கே சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான பணியை தொடங்க வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவரை சந்திக்க முடியாமல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கும் பலர் மருத்துவரையும் பார்க்கமுடியாமல் தங்களுக்கு தொற்று உள்ளதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் பதற்றத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதையும் அரசு கவனிக்க வேண்டும். பரவலான பரிசோதனை என்பது தொடக்கத்திலிருந்தே மக்கள் நீதி மையம் கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறது. 

 அதை செய்யாததால் தான் சென்னையில் மட்டுமே கொரோனா இருப்பது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு அதிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்னையில் இருந்து வெளியேறியது ஜூன் மாதம் முழுவதும் நடந்தது. தற்போது பிற மாவட்டங்களில் பெருகும் தொற்று மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டு இருக்கும் நிலையை காண்பிக்கிறது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 95 ஆய்வகங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்று அரசின் அறிக்கை தெரிவித்தாலும், மாநிலம் முழுவதும்  பரவியிருக்கும் நோய்க்கிருமிகள் தாக்கத்திலிருந்து மக்களை காத்திட அரசு இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்  கோரிக்கையும் ஆகும். அதன் முதற்கட்டமாக கொரோனா நோயின் அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவரின் அனுமதி சீட்டுக்காக காத்திருக்காமல் நேரடியாக ஆய்வகங்களை பரிசோதனைக்காக அணுகலாம் என அறிவிக்க வேண்டும். 

இது மக்கள் மருத்துவரை சந்திக்க மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாக காத்திருப்பதை தவிர்ப்பதுடன், அதில் ஆகும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். அதேவேளையில் அனைத்து ஆய்வகங்களில் பரிசோதனை உபகரணங்கள் போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும். நோய்த்தொற்றின் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் இது போன்ற ஒரு முன்னெடுப்பு  நேற்றிலிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இரண்டாம் கட்டமாக ஆய்வகங்களிலோ மருத்துவமனைகளிலோ மக்கள் கூடுவதை தவிர்க்க கொரோனா பரிசோதனைகளை ஆய்வக ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீட்டிற்கே சென்று ஆய்வுகள் மேற்கொள்வதை தொடங்க வேண்டும். இதனால் தொற்று இல்லாமல் பரிசோதனைக்கு வரும்போது, அவர்கள் ஆய்வகங்களில் காத்திருக்கும் போது தொற்று பரவும் அபாயம் தவிர்க்கப்படும். இந்த வசதிகளை அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் இந்த பரிசோதனைகளின்விலையைகுறைத்திடவேண்டும். 

டெல்லியில் பரிசோதனையின் கட்டணத்தை குறைத்து கடந்த மாதமே அம்மாநில அரசு உத்தரவிட்டது, அதேபோன்று அல்லது அதைவிட விலை குறைப்பினை செய்தால் மக்கள் உயிர் காப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இல்லாமல் செய்திட முடியும். தன்னால் இயன்ற வரை அரசு சிறப்பாக செயல்படும் என்று அரசு சொன்னாலும் மக்களின் உயிர் காக்கப்பட வேண்டிய நேரத்தில் அனைத்து வகையிலும் முனைப்புடன் அரசு செயல்படும் என்ற உறுதியினை அரசு மக்களுக்கு தந்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றிட வேண்டும். அவ்வாறு அரசு பணி புரிந்திட வேண்டுமாயின் வருமுன் காத்தல் வேண்டும், வந்தபின்பு சரிசெய்தல் முறையல்ல, அரசின் காலதாமதத்தால் பாதிக்கப்படப்போவது மக்களின் உயிர் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!