திமுகவை எகிறி அடித்த மக்கள் நீதி மய்யம்.! மாறன் மீது நடவடிக்கை எடுக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் கோரிக்கை

By Ezhilarasan BabuFirst Published May 15, 2020, 5:09 PM IST
Highlights

சட்டமன்ற, மக்களவை, மாநிலங்கவை உறுப்பினர்கள் நாவடக்கத்துடனும், நாகரீகமாகவும் பேச பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் .

திமுக மக்களவை உறுப்பினர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"
என மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  அக் கட்சியின் தொழிலாளர்கள் அணியின் மாநிலச் செயலாளர் பால் பொன்னு சாமி இந்த கோரிக்கை மனு வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :- கடந்த சில தினங்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர்களான திரு. டி.ஆர்.பாலு மற்றும் திரு. தயாநிதி மாறன் ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து பொதுமக்களிடமிருந்து திமுக சார்பில் பெறப்பட்ட புகார் மனுக்களை வழங்கி விட்டு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்திக்கும் போது "தலைமைச் செயலாளர் எங்களை தாழ்த்தப்பட்டவர்களைப் போல் நடத்தினார்" என குற்றம் சுமத்தியதோடு நில்லாமல்

தாழ்த்தப்பட்ட மக்களை மூன்றாம் தர மக்கள் என சொல்லி "நாங்கள் என்ன  மூன்றாம் தர மக்களா..?" "நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா...?" என கேள்வி எழுப்பி தங்களை மிட்டாமிராசுதாரர்கள் போலவும், தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்கள் போலவும் சித்தரித்து இழிவுபடுத்திப் பேசியதை "மக்கள் நீதி மய்யம்" தொழிலாளர்கள் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏற்கனவே திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான ஆர்.எஸ்.பாரதி அவர்கள் "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கலைஞர் போட்ட பிச்சை" எனக் கூறி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பொறுப்பான, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய திமுகவின் மக்களவை, மாநிலங்கவை உறுப்பினர்கள் தொடர்ந்து அம்மக்களை இழிவுபடுத்தி பேசி வருவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. 

எனவே அவர்கள் தங்களின் செயலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி திமுக தலைமை அவர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதோடு மற்ற நிர்வாகிகளை, சட்டமன்ற, மக்களவை, மாநிலங்கவை உறுப்பினர்கள் நாவடக்கத்துடனும், நாகரீகமாகவும் பேச பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் .மேலும் தாங்கள் மக்களவை உறுப்பினர்கள் என்பதையும் மறந்து, தங்களின் கட்சித் தலைமையிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சி குறை சொல்ல தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசியமைக்காக திரு. டி.ஆர்.பாலு மற்றும் திரு. தயாநிதி மாறன் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
 

click me!