நடுத்தர சிறு குறு தொழில்களின் நலமும் வளர்ச்சியும் மொத்த இந்திய பொருளாதாரத்தின் நலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தேவை ஆகும்.
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, நடுத்தர, சிறு, குறு தொழில்கள் மீதான கோவிட் 19 ன் விளைவுகளும் அதற்கான தீர்வுகளும் தேசத்தின் கோடானு கோடி உழைக்கும் மக்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தின் அரணாகத் திகழ்கிற நடுத்தர சிறு குறு தொழில்கள் தொடர்பான ஓர் பிரச்சினை மீது உங்களின் உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமருக்கு கடிதம் எழதியுள்ளார் அதில், இந்தியப் பொருளாதாரத்தின் பல அளவுகோல்களில் நடுத்தர சிறு குறு தொழில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை ஆகும். இத் தொழில்கள் 12 கோடிக்கும் மேற்பட்டவர்க்கு வேலை வாய்ப்புகளைத் தந்து வருகின்றன. வேறு சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கையை அதிகமாக காண்பிக்கின்றன. இந்திய மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 30 % ம், இந்திய ஏற்றுமதிகளில் அநேகமாக 50 % பங்களிப்பும் இத் தொழில்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
28 மாநிலங்களில் உள்ள 350 தொழில் நகரங்களில் உள்ள 1.05 லட்சம் நடுத்தர சிறு குறு தொழில் நிறுவனங்களில் 2019 ல் நடத்தப்பட்ட ஆய்வில் அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 1.35 கோடியில் இருந்து 1.49 கோடி வரை புதிய வேலைகள் இத் தொழில்களில் உருவாகியுள்ளன என கூறப்பட்டுள்ளது. ஆகவே நடுத்தர சிறு குறு தொழில்களின் நலமும் வளர்ச்சியும் மொத்த இந்திய பொருளாதாரத்தின் நலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தேவை ஆகும். சமூகத்தின் எல்லா பகுதியினரின் "உள்ளடக்கிய வளர்ச்சிக்கும்" (InclusiveGrowth) அதன் பங்கு முக்கியமானது. கோவிட் 19 நெருக்கடிக்கு முன்பே இத் தொழில்கள் நெருக்கடியில் இருந்தவையே. அரசின் ஆதரவை நாடி மன்றாடிக் கொண்டிருந்தவையே. நிதி, சந்தை, ஆதார வளம் போன்றவை குறித்த பல கோரிக்கைகளை அவை முன் வைத்து வந்தன. கோவிட் 19 இப் பிரச்சினைகளை எல்லாம் பன்மடங்காக மாற்றியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இத் தொழில்களின் முன்னணி பிரமுகர்களிடம் இருந்து பல ஆலோசனைகளை கிடைக்கப் பெறுகிறேன். நான் கீழ்க் காணும் பிரச்சினைகள் மீது உங்களின் கவனத்தை ஈர்ப்பதோடு பெரும் வேலையின்மை நெருக்கடி ஏற்படாமல் தவிர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.கடன் சேவை உள்ளடங்கிய விகிதத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வந்து அதனை நெகிழ்வாக மாற்றி நிதி வளம் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான விரிவான மேலும் நெகிழ்வான கொள்கையை, கள நிலைமைகளை கணக்கிற் கொண்டு, இந்திய அரசு ஓராண்டிற்காவது வகுக்க வேண்டும். மற்றும் செயல் மூலதனத்திற்கான வரையறைகளை உரிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும். ADHOC கடன் ஏற்கனவே உள்ள செயல் மூலதன வரம்புகளுக்கு உரியதைக் காட்டிலும் கூடுதலாக 25 % வழங்கப்பட வேண்டும்.
இது குறித்த ரிசர்வ் வங்கியின் முந்தைய அறிவிக்கைகள், ADHOC கடன்கள் உரிய நேரத்தில் அதுவும் நெருக்கடி மிக்க காலங்களில் வழங்கப்படா விட்டால் அந்த நிறுவனங்கள் நலிவடைந்து மீட்சிக்கும் வழி இல்லாதவையாக மாறிவிடும் என்று அழுத்தமாக சுட்டிக் காட்டியுள்ளன. இந்த அவசரத்தை மனதிற் கொண்டு உடனடி நடவடிக்கைகள் கால விரயம் இன்றி எடுக்கப்பட வேண்டும். இந்த கடன் 2018-19 ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும். கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவதற்கு தரப்பட்டுள்ள மூன்று மாத கால நீட்டிப்பு நிவாரணத்தை தரவில்லை. வலியை குறுகிய இடைவெளிக்கு சற்று தள்ளிப் போட்டுள்ளது என்பதே. இந்த 3 மாத கால நீட்டிப்பு காலத்திற்கும் வட்டி ரத்து செய்யப்படாததால் கூடுதல் சுமையை அது நடுத்தர சிறு குறு தொழில்கள் மீது ஏற்றியுள்ளது. எனவே இத் தொழில்களின் அனைத்து வங்கி கடன்களை செலுத்துவதற்கு ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமருகுக் எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.